19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை - தொடரும் தேடுதல்
திம்புளை - பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாகவும் கடற்படை சுழியோடிகள், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும் யுவதியை கண்டுப்பிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நான்கு நண்பிகளுடன் கடந்த 18ஆம் திகதி டெவோன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது குறித்த யுவதி கால் தடுமாறி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தலவாக்கலை, லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த பணிகள் இடை நடுவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் சுழியோடிகள் சகிதம் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையும் பலனின்றி முடிந்துள்ளது.
இதேவேளை நாளைய தினமும் யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






