ஜனாதிபதியுடன் செயற்படும் நீங்கள் எமக்குரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள்: யாழ்.முஸ்லீம் மக்கள் கோரிக்கை(Photos)
ஜனாதிபதியுடன் செயற்படும் நீங்கள் எமக்குரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் என யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதி அமைச்சினால் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று மாலை யாழ்ப்பாண நகர் ஜிம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறித்த விஜயத்தின் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தாங்கள் 1990 ம் ஆண்டு வலுக்கட்டாயமாக வடக்கிலிருந்து அனுப்பப்பட்டு மீண்டும் மீள் குடியேறி இங்கே வந்திருக்கின்றோம்.
ஆனால் எம்மில் பலர் தற்போதும் புத்தளம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். வடக்கில் முஸ்லிம் மக்களுக்குக் காணி பிரச்சினை காணப்படுகின்றது.
அதிலும்1990 ம் ஆண்டு நாங்கள் இங்கே வெளியேற்றப்படும் போது இருந்த குடும்பங்கள் பல மடங்காகியுள்ளதால் பலர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற விரும்புகிறபோதிலும் தற்போது காணிப் பிரச்சினை காணப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முஸ்லிம்களுக்குத் தொடர் மாடிக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
தற்போது நீங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றார்கள், ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறீர்கள். எனவே எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து நமக்குரிய தீர்வினைப் பெற்றுத் தாருங்கள்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் பேசுவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. நாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
எனவே நம் சார்பில் எமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து எமக்கு உள்ள காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த காணிப் பிரச்சினை என்பது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல.
வடக்கில் அனைத்து மக்களுக்கும் இந்த காணிப்பிரச்சினை ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





