ஏமனில் பணப்புழக்கத் தட்டுப்பாடு: அந்நியச் செலாவணியை மாற்ற முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
ஏமன் அரசாங்கம் அந்நாட்டு நாணயமான ரியாலின் (Riyal) மதிப்பைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓரளவிற்குப் பலனளித்துள்ள போதிலும், தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு பொதுமக்களுக்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஏடன் (Aden) நகரை மையமாகக் கொண்ட மத்திய வங்கி, சட்டவிரோத நாணய மாற்றகங்களை மூடியதுடன் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம், அமெரிக்க டொலருக்கு நிகரான ஏமன் ரியாலின் வீழ்ச்சியை 2,900 இலிருந்து 1,500 ஆகக் குறைக்க முடிந்தது.
இருப்பினும், வங்கிகள் மற்றும் நாணய மாற்றகங்களில் போதிய அளவு ஏமன் ரியால்கள் இல்லாததால், மக்களிடம் உள்ள சவூதி ரியால் மற்றும் அமெரிக்க டொலர்களை உள்ளூர் நாணயமாக மாற்ற முடியாமல் வணிகங்களும் அன்றாடத் தேவைகளும் முடங்கியுள்ளன.
எழும் குற்றச்சாட்டுக்கள்..
குறிப்பாக ஏடன், தைஸ் (Taiz) மற்றும் முக்கல்லா போன்ற நகரங்களில் உள்ள வங்கிகள், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 சவூதி ரியால்களை மட்டுமே மாற்ற அனுமதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் மருந்துகள் வாங்கவும், அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சில இடங்களில் மருத்துவமனைகள் கூட சவூதி ரியால்களை ஏற்க மறுப்பதோடு, அவற்றை மாற்ற வழியின்றி நோயாளிகள் சிகிச்சையின்றித் திரும்பும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அரசாங்கம் ஊழியர்களுக்கான சம்பளத்தை 100 மற்றும் 200 ரியால் போன்ற குறைந்த மதிப்புடைய தாள்களாக வழங்குவதால், அவற்றை மூட்டைகளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.