உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் தமிழர் பகுதியில் ஆரம்பம்.. ரசிகர்கள் உற்சாகம்
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்று(01.02.2026) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று காலை 7.30க்கு தம்புள்ளையில் இருந்து எடுத்து வரப்படும் உலகக் கிண்ணமானது 8.30க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 10.30 மணிக்கீ வவுனியா நகரத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் வைக்கப்படவுள்ளது.
உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம்
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 3.30க்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25க்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும், 6.20க்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40க்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10க்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
ரி20 உலகக் கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று (01.02.2026) வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
ரி20 உலக கிண்ண வெற்றிக் கிண்ணம் இந்த முறை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து குறித்த வெற்றிக் கிண்ணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பார்வைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

அந்தவகையில், பலத்த பாதுகாப்புடன் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக் கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.

மேலதிக தகவல் - திலீபன்