உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை மற்றும் மாலைத்தீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ்யன் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கித் தூதுக்குழுவினருடன் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதற்காக உலக வங்கியின் ஆதரவை எவ்வாறு பெறலாம் என்பது குறித்த மிக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா,விவசாயம்,மீன்பிடி, உட்கட்டமைப்புகள் என்ற துறைகள் குறுகிய காலத்தில் பலனளிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டு, அவை மேம்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
புதிய முதலீடுகளை நாட்டிற்குள் இழுக்கும் வகையில் சட்டரீதியான வடுவமைப்பு (Legal framework) ஒன்றை உருவாக்கும் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் அதனை ஆதரிக்கும் கொள்கை வழிகாட்டுதல்கள் பற்றியும் உலக வங்கியினர் தெரிவித்தனர்.
உலக வங்கியின் கடனுதவியின் ஆரம்ப கட்ட திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
தெளிவான தீர்வுகள்
இச் சந்திப்பின் மூலம் கிழக்கு மாகாண அபிவிருத்தி, பொது பங்குதாரர்கள் ஒத்துழைப்பு, மற்றும் நடவடிக்கைக் கூட்டு திட்டங்கள் குறித்து தெளிவான தீர்வுகள் பெறப்பட்டுள்ளன.
இதில் தொழிற்துறை அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ச, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









