தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பிசிஆர் சோதனை நிலையத்தின் பணிகள் நாளை ஆரம்பம்
இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய பி.சி.ஆர் சோதனை நிலையத்தின் சோதனை மாதிரிகள் சேகரிப்பு பணிகள் நாளை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்குச் சோதனை அறிக்கைகளை வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட பல தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவே அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரின் சோதனை மாதிரிகள் விமான நிலையத்திலேயே சேகரிக்கப்பட்டு ஆய்வக நடைமுறைகளுக்காக அனுப்பப்படுகின்றன.
இது குறித்து, கருத்துரைத்துள்ள சுற்றுலா அமைச்சகம், தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு சோதனை மாதிரிகள் சேகரிப்பு நாளை செப்டம்பர் 28 முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, நாட்டின் மிகப்பெரிய பி.சி.ஆர் சோதனைத்தளம் செப்டம்பர் 25 அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
இந்த வசதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து, முழுமையாக பி.சி.ஆர்சோதனைகளை மேற்கொள்வதற்காக 05 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டது.
3 மணி நேரத்திற்குள் உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை முடிவுகளை வெளியிடுவதே இதன் நோக்கமாகும்.