முல்லைத்தீவில் யுவதி உள்ளிட்ட இருவர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550 கிராம் கஞ்சா 160 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று (28.06.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய யுவதி மற்றும் இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் கோரிக்கை
அத்துடன், பிரதான சந்தேக நபராக குறித்த இளைஞனுக்கு 550 கிராம் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டிலும் மற்றைய சந்தேகநபரான யுவதிக்கு 160 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் மேலும் தடுத்து வைத்து விசாரிக்க மன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி மூன்று நாட்கள் குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க மன்று அனுமதி வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் 08.07.2025 வரை குறித்த யுவதியினை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



