13 இற்கு முடிவுகட்ட நாம் முழு ஆதரவு! விமல், கம்மன்பில, வீரசேகர கூட்டாகத் தெரிவிப்பு
இலங்கைக்கு சாபக்கேடான 13ஆவது திருத்தச் சட்டத்தை 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியாவில் குரல்கள் வலுத்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
13ஆவது திருத்தச் சட்டம்
மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு இலங்கையை அடக்கி ஆள இந்தியா முனைகின்றது.
அதேவேளை, வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தனிநாடு கோருகின்றார்கள். காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் பகிரப்படவில்லை என்று கூறி அதியுச்ச அதிகாரப் பகிர்வை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
இலங்கை பௌத்த - சிங்கள நாடு. மகாசங்கத்தினர் 13ஆவது திருத்தத்துக்கு அடியோடு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் 13ஆவது திருத்தச் சட்டம் எதற்கு? இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அதை முழுமையாக நீக்க வேண்டும்.
22ஆவது திருத்தச் சட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போல் 13ஆவது திருத்தம் வேண்டாம் எனில் நாடாளுமன்றத்தில் 22ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை இல்லாதொழிக்க வேண்டும்.
இதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆளும் கட்சியிலும், எதிரணி வரிசைகளில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை விரும்பவில்லை.
எனவே, இலங்கைக்குச் சாபக்கேடான 13ஆவது
திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க கட்சி, பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள
வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
