ஆட்டம் காணுமா மொட்டு அரசு?
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து தமது கட்சி வெளியேற வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேர்தல் காலங்களில் சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உரிய வகையில் நிறைவேற்றவில்லை எனவும், கட்சியை ஒடுக்கும் செயல்கள்கூட தற்போது மறைமுகமாக இடம்பெற்றுவருகின்றன எனவும் சுட்டிக்காட்டியே மேற்படி வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
எனினும், சுதந்திரக் கட்சியிலுள்ள மற்றுமொரு தரப்பு, அரசிலிருந்து வெளியேறுவதற்கு விரும்பவில்லை. அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
குறிப்பாக அரசுக்குள் இருந்துக்கொண்டே போராடவேண்டும் எனவும், ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மையப்படுத்தி வெளியேறுவது தவறான விம்பத்தை உருவாக்கும் எனவும் எனவும் அந்த தரப்பு கருத்து வெளியிட்டு வருகின்றது.
இதனால் ஏற்கனவே உடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்காலத்தில் மேலும் இரு அணிகளாக பிளவடையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசு இழக்க நேரிடும்.
இவ்வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவது உறுதியானால் சுதந்திரக் கட்சி தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதற்கிடையில் விமல் வீரவன்ஸ தலைமையிலான அணியினரும் மொட்டுக் கட்சிக்காரர்கள் மீது அதிருப்தியிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.