திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் நேற்றிரவு (17) உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பயன் தரும் தென்னை மரங்களையும் துவம்சம் செய்து உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானையின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மின்சார இணைப்புக்கள் மற்றும் நெல் மூடைகளையும் இழுத்துச் சாப்பிட்டு அட்டகாசம் புரிந்துள்ளது.
கிராம மக்கள் கோரிக்கை
இதன்போது 16 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
இரவு வேளையில் வீடுகளில் தூங்குவது கூட அச்சமாக உள்ளதாகவும் தொடர்ச்சியாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் உட்புகுந்து சேதம் விளைவிப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரவேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் எனவும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











