ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு றிசாத் பதியுதீனின் மனைவி கடிதம்
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீனின் மனைவியான ஆயிஷா றிசாத், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
தனது கணவரின் தன்னிச்சையான கைது தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் (ஏப்ரல் 24) அதிகாலை கைது செய்யப்பட்டார் .
இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆயிஷா றிசாத் இந்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகம் ஞானசார தேரரை கொடிய குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களில் ஒருவராக அறிவித்ததாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஆயிஷா ரிஷாத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஞானசார தேரரோ அல்லது அறிக்கையில் பெயரிடப்பட்ட ஏனையவர்களோ கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது கணவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபடவில்லை, ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் "அவமானகரமான முறையில்" கைது செய்யப்பட்டதாக ஆயிஷா ரிசாத் தெரிவித்துள்ளார்.
எனவே தனது கணவரை விடுவிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆயிஷா வலியுறுத்தியுள்ளார். தனது கணவர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை தாம் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக ரிஷாத் பதியுதீன்
மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைக்க
2021 ஏப்ரல் 27 ஆம் திகதியன்று தடுப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது.