சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் காணொளி; ஏறாவூரில் 16 வயது சிறுவன் கைது - மூவர் தலைமறைவு
ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளியொன்று வெளியானது.
அதன் அடிப்படையில், 16 வயதுடைய மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய மூவர் தலைமறைவு
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று (15) பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டையடுத்து, காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி தளவாய் பகுதியில் 15, 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களைக் கொண்ட மூன்று வன்முறைக் குழுக்கள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழுக்களை அப்பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இயக்கி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்
பொலிஸில் முறைப்பாடு
இந்தக் குழுக்களுக்கிடையேயான மோதல்களின் காரணமாக அண்மையில் நோன்புப் பெருநாள் காலத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட்டு வீடு திரும்பிய குழுவொன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், பழிவாங்கும் நோக்கில், வீதியால் தனியாகச் சென்ற சிறுவன் ஒருவரை மற்றொரு குழுவினர் கடத்திச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மரத்தில் தலைகீழாகக் கட்டி, ஆடைகளை அகற்றி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்றது சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் எனவும், கடுமையாக காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தாக்குதல் நடத்தப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri