போலி அமெரிக்க டொலர்களை அச்சிட்ட பிரதான சந்தேக நபர் கைது
கந்தளாய் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட போலி அமெரிக்க டொலர்களுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பத்தரமுல்லையை சேர்ந்த 36 வயதான இந்த நபர் நேற்று மாலை அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
100 அமெரிக்க டொலர் பெறுமதியான 327 போலி டொலர் நாணயத்தாள்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டன.
டொலரை அச்சிடப் பயன்படுத்தப்படும் விசேட காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களை இந்த சந்தேக நபரே இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காகிதங்கள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.