கோவிட் குணமடைந்த பின் 200 அறிகுறிகள் - உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கோவிட்டிற்கு பிந்தைய நிலை, நீண்ட கோவிட் நிலை என அழைக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது சுமார் 200 அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனினும் மூச்சுத் திணறல், அறிவாற்றல் செயலிழப்பு மற்றும் சோர்வு ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட்டிற்கு பிந்தைய நிலை என்பது ஒரு நோயாளி குணமடைந்த பிறகும் கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நிலையாகும்.
இந்தநிலையில் பல்வேறு நிலைகளில் மூன்று முதல் ஒன்பது மாதங்கள் இந்த அறிகுறிகள் நீடிக்கும் என்ற அறிக்கைகள் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மை தலைவர் விஸ்மிதா குப்தா-ஸ்மித் தெரிவித்துள்ளார்.
எனினும் இது எவ்வளவு காலத்துக்குள் சுகம் பெறும் என்பதைப் புரிந்து கொள்ள அதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இத்தகைய கோவிட்டிற்கு பிந்திய அறிகுறிகளுக்கான காரணம் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறிய அவர், அது செய்யப்படும் வரை அவற்றுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எனவே முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் மற்றும் உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பதன் மூலம் நோயைத் தடுப்பது முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.