இலங்கையில் செயற்படும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய வாட்ஸ்அப் குழு?
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாட்ஸ்அப் குழு, இலங்கையில் செயற்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்படி, இது தொடர்பில் மேற்கு மேல் மாகாண புலனாய்வு பிரிவால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிபர் மற்றும் அனைத்து பிரிவுகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் தகவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இன்டர் ஸ்கூல்' என்ற பெயரிலான வாட்ஸ்எப் குழு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையது என்றும், யாராவது அதில் இணைவதற்கு அழைக்கப்பட்டால், அவர்கள் அந்த குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாட்ஸ்எப் குழு தொடர்பில் விரைவான விசாரணையை மேற்கொள்வது பொருத்தமானது என்று மேல் மாகாண புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான அனைத்து குழுக்களையும் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை,இன்டர்ஸ்கூல் என்ற போலியான ஐஎஸ்ஐஎஸ் வாட்ஸ்எப் குழு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வாட்ஸ்எப் குழுவை ஐஎஸ்ஐஎஸ் உருவாக்கியது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறைப்பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய வாட்ஸ்எப் குழு தொடர்பான, காவல்துறை ஆவணம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி "இன்டர்ஸ்கூல்ஸ்" என்ற வாட்ஸ்எப் குழுவால் அழைக்கப்பட்டால், அந்தக் குழுவில் சேர வேண்டாம்.
இது ஐஎஸ்ஐஎஸ் க்கு சொந்தமானது. குறித்த குழுவில் இணைந்தால் அதிலிருந்து வெளியேற முடியாது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஒரு வாட்ஸ்எப் குழுவில் யாராவது சேர்ந்தால் அவர்கள் வெளியேற முடியாது என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.