ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் தரப்புக்கள் கூறியவை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது.
கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியிலும் சுவிற்சர்லாந்திலும் விதிக்கப்பட்டுள்ள பாரிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிகமாக இணையவழி ஊடாகவே இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்கின்றனர்.
இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் இணையவழி ஊடாக இணைந்து கொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், 01/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 2 - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை (Item 2 - Annual report of the United Nations High Commissioner for Human Rights) தொடர்பான பொது விவாதத்தில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மூன்று உரைகளைப் பதிவு செய்திருந்தனர்.
SDCE என்ற அமைப்பின் சார்பாக தனது வாய்மூல அறிக்கையினை வழங்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானம், ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த அனைத்து வகையான இன அழிப்பினையும் மானிட உரிமை பேரவையின் ஆணையர் தனது உரையில் பதிவுசெய்தார்.
ஆனால் இன அழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி மறுக்கப்படுகிறது, 6 / 7 மாதங்களுக்குள் கொல்லப்பட்ட 1,47, 000 மக்களை உயர் ஆணையர் தனது தொடர்ச்சியான அறிக்கைகளில் ஏற்க மறுக்கின்றார்.
அதுபோல இன்று சிங்கள இராணுவம் தமிழர்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ளதை உயர் ஆணையர் ஏற்க மறுக்கின்றார். வடக்கு மாகாண அவை போர் குற்றம், இனஅழிப்பு ஆகியவற்றை சுதந்திரமான உலக விசாரணை நடத்தவேண்டுமென்று கோரிக்கை வைத்தது
.
பொத்துவில்லிருந்து பொலிகண்டி வரை நடந்த நடைபயண போராட்டம் இந்த உலக நீதியை வேண்டுகோளாக முன்வைத்தது. இந்த நீதி இனஅழிப்பு, அடிப்படை கொள்கைகள், தன்னுரிமைக்கான உரிமை, ஈழத்தமிழ் தேசியம் ஆகியவற்றிற்கு தரவேண்மென்று வேண்டுகோள் விடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சிறப்பு அமர்வுகள் உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துதல், சிறப்பு ஆய்வாளரை நியமித்தல் ஆகியவை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார்.
அந்தவகையில் பாரதி அமைப்பின் சார்பில் லீலாதேவி ஆனந்த நடராசா , வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பின் சார்பாக வழங்கிய வாய்மூல அறிக்கையில், ஐ.நா மானிட உரிமை பேரவையின் ஆணையர் சிறீலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்பாடுகளைப் பாராட்டுகிறார்.
ஆனால் ஒன்றுமே செய்யாத அலுவலகத்தை நாங்கள் ஒதுக்குகிறோம். இதனுடைய வெளிவேடகாரத்தனத்தை உலகறிய வெளிப்படுத்துகிறேன். நாங்கள் இந்த அலுவலகத்தில் 5 காணாமல் ஆக்கப்பட்டோரின் அனைத்து ஆவணங்களையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கொடுத்தோம்.
ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இந்த அலுவலகம் செயலற்று இருக்கிறது. இன அழிப்பு குற்றங்களையும், போர் குற்றங்களையும் ஆராய சிறீலங்கா அரசு தவறியதால் ஈழத்தமிழர்களும், குடிமைச்சமூகங்களும் தமிழ்த்தேசிய கட்சிகளும் சிறீலங்கா அரசினை உலக குற்றவியல் மன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கின்றன. ஒரு சிறப்பு ஆய்வாளரை இலங்கைக்காக நியமிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
