ஜனாதிபதி தெரிவில் தமிழ் கட்சிகளின் கோரிக்கை என்ன...!- கவீந்திரன் கோடீஸ்வரன் கேள்வி
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபட வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதி தேர்வு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்ற சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது.
நாட்டில் அராஜகங்களை மேற்கொண்ட பொருளாதார ரீதியாகவும் சீரழித்த மற்றும் எமது சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காகவும், மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தும், எமது இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக வந்த மிக மோசமான ஒரு ஜனாதிபதி சிங்கள, தமிழ், முஸ்லீம் என அனைத்து மக்களினாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் புதிய ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளினாலும் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்.
வேட்புமனுத்தாக்கல் இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் களமிறக்கபட உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் பரப்பில் இருக்கின்ற தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட கட்சிகள் அத்தோடு தமிழர் நலன் சார்ந்து செயற்படுகின்ற தமிழ் தேசிய பரப்பிற்கு அப்பால் இருக்கின்ற மலையக கட்சிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது முக்கியமானதொன்றாக இருக்கின்றது.
தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி அல்லது தெரிவு செய்யப்படவிருக்கின்ற வேட்பாளர்களிடம் என்ன கோரிக்கைகளை முன்வைக்க போகின்றார்கள் என்கின்ற விடயம் முக்கியமானதொன்றாக இருக்கின்றது.
இறைமை சார்ந்த பிரச்சினைகள்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அதிகளவான பிரச்சினை காணப்படுகின்றது. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை மட்டுமல்லாமல் ஏனைய இறைமை சார்ந்த பிரச்சினைகள் எங்கள் இனம் சார்ந்த பிரச்சினைகள் கூடுதலாக காணப்படுகின்றது.
விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்கள் கொடுக்கப்படுகின்ற கோரிக்கையானது உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகியுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமானது அம்பாறை மாவட்டமாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் இருப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அவர்களின் உரிமை சாரந்த விடயங்கள் இனம் சார்ந்த விடயங்கள் மதம் சார்ந்த விடயங்கள் இருப்பு சார்ந்த விடயங்கள் என்பன தற்போது கேள்விக்குறியாகி கவலைக்கிடமாகியுள்ளது.
இந்த வகையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் விசேடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனோடு தமிழ் தேசிய கட்சிகள், கஜேந்திர குமார் பொன்னம்பலம் கட்சி என்பன கூடுதலான கவனத்தினை செலுத்த வேண்டி இருக்கின்றது.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது முதலாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.
இச் செயலகத்திற்கான நிதி மற்றும் காணி அதிகாரம் என்பன கொடுக்கப்படாமல் தற்போதும் கூட மறுக்கப்பட்டு காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட மக்களின் கோரிக்கை

அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட மக்களின் முதலாவது கோரிக்கையாக வடக்கு பிரதேச செயலகத்தின் காணி நிதி அதிகாரங்கள் என்பன கொடுக்கப்பட வேண்டும்.
இரண்டாது தொல்லியல் மற்றும் வன இலாக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
தொல்லியல் என்ற போர்வையில் விகாரைகள் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைள் மற்றும் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினைகளாகும். அந்த வகையில் புதிய ஜனாதிபதி வேட்பாளர்களிடையே தமிழ் தேசிய கட்சிகள் இவ்வாறான விடயங்களை வேண்டுகோளாக முன்வைப்பது அவசியமாகும்.
இது அம்பாறை மாவட்ட அனைத்து மக்களின் முக்கிய கோரிக்கையாக காணப்படுகின்றது. இது தவிர அண்மையில் கூட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸவரன் வடக்கை மையப்படுத்தி கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதில் வடக்கை மட்டும் முக்கியமான கோரிக்கைகளாக வைக்காமல் அம்பாறை மாவட்டத்தின் இருப்பை அல்லது பாரம்பரியத்தை பாதுகாக்கிற விடயத்தை முக்கியமாக முன்வைக்க வேண்டும்.
வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். தொல்லியல் என்ற போர்வையில் அத்துமீறி பிடிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
அதில் விகாரைகள் அமைப்பது தடை செய்யப்பட வேண்டியதொன்றாக இருக்கின்றது. அது மட்டுமன்றி அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது மலையக கட்சிகள் ஆளும் கட்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விடயத்தை முன்வைக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்களாக இருக்கின்றீர்கள்.
தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வந்து அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவோம் என்ற போலி வார்த்தைகளை கூறாமல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்விடயம் தான் அம்பாறை மாவட்ட மக்கள் உங்கள் மீது வைக்கின்ற ஒரு விண்ணப்பமாக உள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதற்கான ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று நினைக்கின்றேன்.அது போன்று ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்பகின்றேன்” என தெரிவித்தார்.