சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்! மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
மேற்கிந்திய தீவுகளுக்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று(1) பலப்பரீட்சை நடத்தின.
அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் 6 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்கள் சேர்த்தது. 33 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்த ஹோப், வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சேஸ் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் சேர்க்கையில், களம் வந்த உடனே ஹெட்மயரும் அதிரடியாக ஆடினார். 12 பந்துகளில் 27ஓட்டங்கள் குவித்த ஹெட்மயர், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சேஸூம் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரூதர்போர்டும் 14 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பவல் மற்றும் ஹோல்டர் அதிரடியாக ஆடினர். இருவரும் சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பவல் (34), ஹோல்டர் (37) ஓட்டங்கள் எடுத்திருந்தனர். இதனால், 20 ஓவரில் மேற்கிந்திய தீவு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இமாலய இலக்கு
196 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா (10), இஷான் கிஷான் (10) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் சஞ்சுசாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் (18) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தாலும் சஞ்சு சாம்சன் தனது அதிரடியை நிறுத்தவில்லை. 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, வந்த திலக் வர்மா (27), ஹர்திக் பாண்டியா (14) ஆகியோர் ஓட்டங்கள் குவித்தனர்.

இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய சஞ்சு சம்சன் 97 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையானார்.
இதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. மார்ச் 5ம் திகதி நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச சேஸ் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri