லொஹான் ரத்வத்தே சகல பதவிகளில் இருந்தும் உடனடியாக விலக்கப்பட வேண்டும் - சுமந்திரன்
லொஹான் ரத்வத்தே சகல பதவிகளில் இருந்தும் உடனடியாக விலக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள காணொளியொன்றில் அவர் குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அதில் மேலும், வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுதான் பதவி விலகுகிறார் என்று லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கிறது.
ஆனால் அவர் தொடர்ந்து வேறு விடயங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
சகல பதவிகளில் இருந்தும் அவர் உடனடியாக விலக்கப்பட வேண்டும். அவருடைய பொறுப்பில் இருக்கின்ற கைத்துப்பாக்கி அவரிடத்திலே இருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகத் தான் இருக்கிறது. இந்த சம்பவங்கள் சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக லொஹான் ரத்வத்தேயும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.
எனினும் இன்னமும் பொலிஸார் இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவரவில்லை.
சிறைக்கைதிகள் அரசாங்கத்தின் பொறுப்பிலே இருக்கின்றவர்கள். அவர்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது அரசு.
ஆகையினாலே இந்த பாரதூரமான செயல் சம்பந்தமாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்