22ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்! அமைச்சர் உறுதி
இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(28.08.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
22ஆவது திருத்தச் சட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது.
ஆனால், தற்போதைய ஆட்சியில் பெரியவர், சிறியவர் அல்லது பணக்காரர் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதன் காரணமாகவே, பழைய ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு வருகின்றனர்.
நீதிமன்ற சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலையை மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.
நிதி ஒதுக்கீடு
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக வரலாற்று ரீதியாக மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2026ஆம் ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 1.3 டிரில்லியன் ரூபாவும், அடுத்த ஆண்டில் 2 டிரில்லியன் ரூபாவும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக்கப்படும். கடந்த காலத்தில் போதைப்பொருள், பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் ஊழல் போன்றவையே ஊக்குவிக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசு அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டி வருவதால், கட்சி பேதங்களை கடந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.