அரசியல்வாதிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்க வேண்டுமென ஏற்கனவே எச்சரித்திருந்தோம்! நவீன் டி சொய்சா
அரசியல்வாதிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்க வேண்டுமென எற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டமானது அனைவருக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டுமே தவிர பிரதேச சபை உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என வேறு வேறு சட்டங்கள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்ற கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் அங்குரார்ப்பண நிகழ்வுகள், போராட்டங்கள், விழாக்கள் என்பனவற்றில் பங்கேற்றிருந்தனர் எனவும், அவற்றில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் பேணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக அளவிலான பெருந்தொற்று ஒன்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு சுகாதார விதிகளை பின்பற்றுவதனைத் தவிர்ந்த வேறு எந்த மாற்று வழிகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் எடுத்து வரும் முனைப்புக்களுக்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.