மக்களின் அரசியல் உரிமைகளுடன் சேர்ந்து பயணிப்பதற்கு தயார் : சிறீதரன் பகிரங்கம்
மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று (03) கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர்
தொடர்ந்து உரையாற்றும் போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் கண்டாவளை பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இனிவரும் காலங்களில் மாதாந்தம் நடத்தப்பட வேண்டும். எமது மக்களின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி சார்ந்தும் அரசியல் உரிமைகளுக்காகவும் சேர்ந்து பயணிப்பதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம்.
கண்டாவளை பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகள் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
அதனை விட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மத்திய வகுப்பு திட்ட காணிகளில் பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |