திருகோணமலையில் நீர் துண்டிப்பு - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
கந்தளாய்- திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இரண்டு நாட்கள் நீர் துண்டிக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 22ம் திகதி மற்றும் 23 திகதிகளில் நீர் துண்டிப்பு இடம்பெற உள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
கந்தளாய்-திருகோணமலை பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை பல தடவைகள் திருத்திய போதிலும் இன்னும் அதில் பல வெடிப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜயந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக 22ஆம் திகதி முழுமையாக நீர் துண்டிக்கப்பட உள்ளதாகவும், 23ம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெற உள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீர் துண்டிப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தமக்குத் தேவையான நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.