மன்னாரில் கழிவு அகற்றல் ஸ்தம்பிதம்:நகரசபை முதல்வர் எச்சரிக்கை
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்ட செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (14) மதியம் மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை.
குப்பை கொட்டும் பிரச்சினை
இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை.குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.
சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம். அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு ,மாவட்ட செயலாளர் , வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள்.ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.
குப்பை அகழ்வு செய்தாலும்,கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் திங்கட்கிழமை(13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை.
கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
