வெலிக்கடைச் சிறைச்சாலையில் பிரபுக்களுக்கு இரகசியமாக கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதா?
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சில முக்கிய பிரபுக்களுக்கு இரகசியமான முறையில் விதிமுறைகளை மீறி கொவிட்-19 நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை தெற்கு ஊடகமொன்றுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக முன்பதிவு செய்து கொள்ளாத முக்கிய பிரபுக்கள் சுமார் நூறு பேர் இரகசியமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று முன் தினமும் நேற்றும் இவ்வாறு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வெளிநபர்களுக்கு தடுப்பூசி வழங்கியமை குறித்து அரசாங்கம் உடன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பெண் அதிகாரியொருவர், தடுப்பூசி குறித்த விசேட நிபுணத்து மருத்துவரின் மகள் ஒருவர் போன்றவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முயற்சித்த போது அது வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தெரிவு செய்யப்பட்ட முக்கிய பிரபுக்களுக்கு எவ்வாறு இந்த தடுப்பூசிகளை இரகசியமாக வழங்கப்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் இல்லை என்றாலும், விசாரணைகளின் போது இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.