இராவணன் சிங்கள பௌத்த அரசனா? சிவாஜிலிங்கம் கூறும் தகவல்கள்
சிங்கள பௌத்த அரசு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றியமைக்கும் செயற்பாட்டிலேயே பயணிக்கிறது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறித்த செவ்வியில்,
கேள்வி - சைவ வழிபாட்டு யாத்திரைத் தலங்களுக்கு மத்தியிலும் பௌத்த விகாரைகள் கட்டமைக்கப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் - கதிர்காமத்தில் இருந்து தமிழர் தாயகப் பகுதி எங்கும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
திருகோணமலை பிரட்றிக் கோட்டை பகுதியில் கோணேசர் பூமி, கன்னியா வெந்நீரூற்று, தென்னமரவாடி, மன்னார் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு கொக்குளாய் பகுதி போன்ற எண்ணற்ற பிரதேசங்களை கூற முடியும்.
சரித்திர ரீதியான உதாரணம் ஒன்றை கூற விரும்புகின்றேன். 13ஆம் நூற்றாண்டில் இபன்படூட்டா என்ற போத்துகீச தேசத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் தனது இலங்கை தீவுக்கான பயண அனுபவத்தில் கப்பல் மூலம் பயணம் செய்து புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் வந்திறங்கியதாகவும் யாழ்ப்பாண மன்னனுடைய ஏற்பாட்டில் குதிரை ஒன்று தன்னை வரவேற்று சிவனொளிபாத மலைக்கு கூட்டிச் சென்றதாகவும் அங்கே பிராமணர்கள் பூஜை யாகம் என்பவற்றில் ஈடுபட்டு இருந்ததாகவும் கதிர்காமத்திற்கு சென்று நேரில் பார்த்த பொழுது சுமார் 500 பிராமணர்கள் யாக பூஜையில் ஈடுபட்டு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
சிங்கள பௌத்த அரசு நிகழ்ச்சி நிரலின்படி இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றியமைக்கும் செயற்பாட்டிலேயே பயணிக்கின்றது.
கேள்வி - இராவணனை சுதேச சிங்கள அரசனாக உருவாக்குவதற்குரிய புலமைசார் கட்டமைப்பு ஆய்வினை சிங்கள அரசு விஸ்தரித்து முன்னெடுத்துள்ளதே?
பதில் - இராவணனை சிங்கள பௌத்த அரசனாக காட்ட எடுக்கப்படும் முயற்சிகள் கற்பனைகள் நிறைந்த மகா வம்சத்தைப் போலவே இருக்கும்.
மகாவம்சம் பாளி மொழியிலேயே எழுதப்பட்டது. மகாவம்சம் எழுதப்பட்ட பொழுது சிங்கள மொழி உருவாகியிருக்கவில்லை.
சிங்கள மொழி உருவாகியிருக்கவில்லை. சிங்கள மொழி சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றது.
சிவபக்தனான இராவணனை சிங்கள அரசனாகக் காட்ட முற்படுவதை சிங்களவர்களுடைய மோசமான செயல்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.