முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவு!வைகோ இரங்கல்
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது வாழ்விணையர், 11 இராணுவ வீரர்கள் குன்னூரில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய இராணுவத்தின் 27 ஆவது தலைமைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெனரல் பிபின் ராவத், 2019 இல் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜெனரல் பிபின் ராவத், ஐ.நா. அமைதிப்படையில் பன்னாட்டு இராணுவ வீரர்கள் கொண்ட படைக்கு தலைமை வகித்து, காங்கோ நாடு சென்றார். பல களங்களில் அவரது போர்த்திறனும், துணிச்சலும் வெளிப்பட்டு இருக்கின்றன.
இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கவும், இராணுவக் கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது.ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக் காலத்தில் திறம்படப் பணியாற்றியதால், உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நாட்டில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - 10 பேர் பலி