சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் : அரச அதிபர் தெரிவிப்பு
சிறுவர், பெண்கள் வன்முறைகளைத் தடுப்பதற்குப் பாடசாலைக் கல்வி ஊடாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். தனியார் விடுதியில் இடம்பெற்ற சிறுவர் பெண்கள் தொடர்பான வன்முறைகளை இல்லாதொழித்தல் மாற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் நேற்றையதினம் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது சிறுவர் பெண்கள் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதனை தடுப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்கள் அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றமை பாராட்டத்தக்க விடயம்.
சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்குப் பாடசாலைக் கல்வி ஊடாக மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பாடசாலை பருவத்திலே மாணவர்கள் சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகள் எவை அதை எப்படி தடுக்க முடியும் சட்டத்தில் அவ்வாறான பாதுகாப்புகள் உள்ளது என்பது பற்றி அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
ஆகவே சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகளைத் தகர்த்து ஒழுக்கம் மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அனைத்து துறையினரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட செயலக பிரதம திட்டப் பணிப்பாளர் ,மாவட்டச் செயலாளர், பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.