சுகாதார விதிமுறைகளை மீறுவோர் கண்காணிப்பு கமெரா மூலம் அவதானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
சுகாதார விதிமுறைகளை மீறுவோர் மீது கண்காணிப்பு கமெரா மூலம் அவதானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கரைச்சி பிரதேச சபையினால் எடுக்கப்பட்டுள்ள கோவிட்- 19
பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்
தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது உள்ள கோவிட் பரம்பல் உண்மையில் மக்களை அச்சத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் இடம்பெறுகின்ற சம்பவங்களை அவதானிக்கின்றபோது மீண்டும் ஒரு அவலம் எமது மக்களிற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விடயத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தை தம்புள்ளையுடன் நேரடி தொடர்பைப் பேணும் சந்தையாகக் காணப்படுகின்றது.
இந்த நிலையில் அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. தொற்று நீக்கல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், கடந்த காலங்களைப் போன்று சேவைச்சந்தை நடைமுறைகளை மீண்டும் அமுல்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இவ்வாறான நிலையில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும்போது சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பொது மக்களும் இவ்விடயம் தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வேண்டப்படுகின்றீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாகக் கிளிநொச்சி சேவைச்சந்தை மற்றும் பசுமைப்பூங்கா ஆகியன காணப்படுகிறன. குறித்த பகுதிகளில் மக்கள் முக கவசங்களை அணியாது செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. அதற்கு ஏதேனும் விசேட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளீர்களா? கடந்த காலங்களைப்போன்று பொலிஸாரின் உதவியை பெற்றுள்ளீர்களா எனவும் அவரிடம் வினவியபோது,
பொலிஸாரின் உதவியை நாங்கள் நாடவில்லை. ஆனால், எமது ஊழியர்களைக்கொண்டு இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது. 90 வீதமான மக்கள் ஒத்துழைக்கின்றபோதிலும், சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
ஆனால் மக்கள் கூடும் பகுதிகளில் முக கவசம் இல்லாது செல்வதைத் தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். எமது ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த கமேராவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளோம் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.