புதுக்குடியிருப்பில் நிலம் ஆக்கிரமிப்பு அரச திணைக்களங்கள் ஓரவஞ்சனை: கிராம மக்கள் குற்றச்சாட்டு
புதுக்குடியிருப்பில் குளத்தின் நிலம் ஆக்கிரமிப்பு அரச திணைக்களங்கள் நடவடிக்ககை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிராமத்தின் சனசமூக நிலையத்தின் நிர்வாக உறுப்பினர் ஜேயதாஸ் நிர்மலகாந் தலைமையில் கீழ், பொது அமைப்புக்கள் சார்பாக நேற்றையதினம் (10.06.2023) முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக அமையத்தில் வைத்து கிராம மக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கமக்கார அமைப்பினர், பெண்கள் அபிவிருத்தி சங்கத்தினர், விளையாட்டு கழகத்தினர் கலந்து கொண்டுள்ளதுடன், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மந்துவில் கிராமத்தில் உள்ள மணற்குளம் ஆக்கிரமிப்பும் அதற்கு பின்னால் இருக்கின்ற அரச அதிகாரிகளின் ஊழல்கள் தொடர்பில் ஊடக சந்திப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
விவசாய நடவடிக்கைகள்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மந்துவில் மணக்குளம் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை எம்.பாவிலுப்புள்ளை சுவாமிகளின் சிந்தனைக்கு அமைவாக மந்துவில் மணற்குளம் அருகில் உள்ள கிராம மக்கள் இணைந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தில் இருந்து 33 ஏக்கர் வயல் காணிகளும் 35ற்கு மேற்பட்ட தோட்டம் செய்கின்ற பயனாளிகள் இருக்கின்றார்கள்.
அத்துடன் விவசாய நடவடிக்கைக்கு அப்பால் பிரதேசத்தில் வாழ்கின்ற மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், மந்துவில், சிவநகர் போன்ற கிராமங்களுக்கு நடுப்பகுதியில் குளம் அமைந்துள்ளதால் நிலத்தடிநீர் கால்நடைகள் வான்பயிர்களுக்கு பயன்கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு
மேலும்,மணற்குளத்தின் பரப்பு 9.6 ஏக்கராக காணப்பட்டுள்ளது இதன் மூன்றில் ஓரு பகுதி இன்று ஆக்கிரமிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணக்கூடியதாக உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பகுதியினை மந்துவில் சிவன் ஆலயமும் ஏனைய பகுதியினை 5 தனியார்களும் ஆக்கிரமித்துள்ளார்கள்.
இது தொடர்பில் பலதடவைகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், பிரதேச சபை, கமநல சேவைதிணைக்களத்திற்கு முறையிட்ட போது அதற்கான எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணைபோகின்றார்கள்.
இந்த நிலையில் சிவன் ஆலயத்தினை குளத்தின் நடுப்பகுதியில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்தார்கள் அன்று தொடக்கம் இந்த குளத்தின் ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு வந்துள்ளோம்.
அதிகாரிகள் இதனை செவிசாய்ப்பதில்லை இனங்களுக்கிடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணைக்கத்தினை சீர்குலைக்கின்றது என்ற சாட்டினை இப்போது சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.
உரிய ஆவணங்கள் வழங்கப்படாமை
இது தொடர்பில் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம் 2019ஆம் ஆண்டு வழக்கு போட்டோம் பிரதேச செயலகம் செய்யவேண்டிய வழக்கினை நாங்கள் தொடர்ந்தோம்.
முல்லைத்தீவு நீதிமன்றில் நீதவான் அவர்கள் அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட ஆவணங்களும் பதில்களும் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் அந்த வழங்கு 2022ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் அரச அதிகாரிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்தான் பிரதான காரணம், குளத்தின் காணிக்குள் கோவில் கட்டப்பட்டதற்கு பிரதேச செயலகம் அனுமதி வழங்கவில்லை என்று சொல்கின்றது.
பிரதேச சபைக்கு உரிய அதிகரத்தினை இங்கு பயன்படுத்தப்படவில்லை அனுமதி இல்லாத கட்டிடம் கட்டப்பட்டும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதிகாரம் துஸ்பிரயோம் இங்கு இடம்பெற்றுள்ளது.
சட்ட நடைமுறைகள்
இது ஒருவகையான ஊழல் இதனை பிரதேச செயலகம்,பிரதேச சபை,கமநலசேவைதிணைக்களம் செய்து கொண்டிருக்கின்றது என அப்பட்டமாக தெரிகின்றது.ஒட்டுமொத்தமாக நாங்கள் பார்கின்றபோது பிரதேச செயலகம் ஒரவஞ்சகத்துடன் நடந்து கொள்கின்றது.
இவர்களுக்கான நடவடிக்கையினை இந்த அரசாங்கம் எடுக்கவேண்டும். அரச அதிகாரிகளிடம் சென்றோம்,நீதிமன்றம் சென்றோம் நீதி கிடைக்கவில்லை ஊடகத்திற்கு வந்தோம் எங்கள் இந்த பிரச்சினை தொடர்பில் அரசஅதிகாரிகள், உயர்மட்டங்கள், இயங்கைவளங்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் எல்லோருக்கும் எங்கள் தகவல் சென்றடைய வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம்.
இன்றைய கால நிலையில் எங்கள் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தினை நசுக்குகின்ற வகையில் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிந்துள்ளோம்.
நிதி ஒதுக்கீடு
இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எங்களை போன்ற ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எங்களை போன்றவர்களின் வாய்கள் நசுக்கப்படும் அப்படியான சந்தர்ப்பத்தினை இந்த அரசாங்கம் வழங்கக்கூடாது.
இது போன்ற சம்பவங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். குளத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களம் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கு மேலாக எங்கள் மக்கள் பிரதிநிதிகளும் பிழைவிட்டுள்ளார்கள் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கம்பரெலிய திட்டத்தின் கீழ் கோவிலை புனரமைக்க நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மற்றும் ஒரு முன்னால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ன குட்டை ஒன்றிற்கு 1.5 மில்லியன் ரூபாநிதியினை ஒதுக்கியுள்ளார் ஏன் இந்த மணற்குளத்தினை அபிவிருத்தி செய்ய பின்னடித்தார்கள்.
இவற்றை எல்லாம் பார்கின்ற போது தனிய ஒரு அரச அதிகாரிகளோ சமூகமோ இதில் சம்மந்தப்படவில்லை இதற்கு மேலாக அரசியல் வாதிகளும் தங்கள் செல்வாக்கினை செலுத்தி கொண்டிருக்கின்றீர்கள் தயவு செய்து மக்கள் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இங்கு இல்லை அதற்கான காரணம் மாவட்டத்தில் உள்ள மக்களை பொது மக்கள் பிரதிநிதிகள் சமமாக மதிக்கவில்லை என்பதுதான் காரணம், அதனால்தான் பலர் தோற்று போனார்கள்.
குடி நீர் தட்டுப்பாடு
இப்போது வன்னிமாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் இதனை கவனத்தில் எடுத்து எங்கள் இயற்கை வளத்தினை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எதிர்கால சந்ததி நீர் இல்லாமல் எவ்வளவு கஷ்ட்டப்படப்போகின்றது என்பதை அறிந்து வருகின்றோம். எங்கள் கிராமங்களில் சுத்தமான குடி தண்ணீர் இல்லை.
இந்த நிலை தொடராமல் இருக்க குளத்தினை புனரமைக்க வேண்டுவதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுபினர்கள் அரச அதிகாரிகள் அனைவரும் குளத்தினை ஒரு பொதுவளமாக நினைத்து புனரமைப்பு செய்கின்ற வேலையினை முன்னெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
