புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்..
புதிய இணைப்பு
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தவெகவின் தலைவர் விஜய் நாளையதினம் பதவியேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக 108 ஆசனங்களை தவெக பெற்றிருந்தது.
இதன்படி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இரண்டு முறை ஆளுநரை சந்தித்து விஜய் அனுமதி கோரிய போதிலும் பெரும்பான்மை இல்லாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குச் செல்ல வேண்டிய நிலை தவெகவிற்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர், பேச்சுவார்த்தை நடத்திய சில கட்சிகள் விஜய் தரப்பிற்கு ஆதரவு வழங்க சம்மதித்துள்ளனர்.
அந்தவகையில், காங்கிரஸ் 5 ஆசனங்கள், சிபிஎம் 2 ஆசனங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 ஆசனங்கள், ஐயுஎம்எல் கட்சி 2 ஆசனங்கள் வழங்கி தவெக கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதற்கமைய இன்று மாலை, ஆளுநரை மீண்டும் சந்தித்த தவெகவின் தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைப்பதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியுள்ளார்.
இதன்படி, நாளையதினம் 11 மணியளவில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளதுடன், தவெக ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் அலுவலகத்திற்கு தவெக கட்சித் தலைவர் விஜய் நேரில் சென்று தங்களின் நன்றியை தெரிவித்து வருகிறார்.

மூன்றாம் இணைப்பு
இன்னும் 15 நிமிடங்களில் விஜய் சமர்பித்த ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்ட பின்னர் முடிவு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
உச்சக்கட்ட பரபரப்பிற்கு மத்தியில் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஆயத்த பணிகள் நேரு ஸ்டேடியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்னும் சற்று நேரத்தில் இரு முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதன்படி, தவெகவின் ஆதரவு 117ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விசிக ஆதரவு வழங்குமானால் இந்த ஆதரவு எண்ணிக்கை 119ஆக உயருமென தெரியவருகிறது.
இவ்வாறான சூழலில் இன்று மாலை 6 மணிக்குள் ஆளுநரை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சற்றுமுன்னர் விஜய் ஆளுநரை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுள்ளார்.
விஜய் ஆளுநர் மாளிகைக்குள் சென்ற பின்னர், தவெக தொண்டர்கள் தங்களின் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.