புதிய கூட்டணியில் இணைவாரா விக்னேஷ்வரன்..! ஆரம்பமாகியுள்ள பேச்சுவார்த்தை (photo)
யாழில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உருப்பினருமான விக்னேஷ்வரன் இணைந்து கொள்ளவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கூட்டணி
இது தொடர்பிலான கூட்டம் இன்று (14.01.2023) சி.வி.விக்னேஷ்வரனின் இல்லத்தில் நடைபெற்று வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நேற்று (13.01.2023) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து குறித்த கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ்வரன்
இந்த நிலையில் ஏற்பட்ட சின்னம் தொடர்பான இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து நேற்று (13.01.2023) வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கூட்டத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ்வரன் சமரசத்தின் அடிப்படையில் இன்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
புளொட் சார்பாக த.சித்தார்த்தனும், ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும், ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்ட இழுபறி காரணமாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் முன்னாள் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் அணியினர் இடைநடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
விக்னேஸ்வரன் அணியினரை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - ராகேஷ்