முல்லைத்தீவில் பாடசாலையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்(Photo)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தயாலயத்தின் மாணவர்கள்,பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று(16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கற்பித்தல் நடவடிக்கைக்கு வேண்டாம் என்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியரை இடம்மாற்றியமையினை கண்டித்தும் அந்த இடம்மாற்றத்தினை மீள பெற வலியுறுத்தியும் மாணவர்கள்,பெற்றோர்கள் பாடசாலையினை மூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கோரிக்கை
இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான செயற்பாடு மாணவர்களை காதல் திசையில் இழுக்கும் செயற்பாடாக காணப்படுவதாக மாணவர்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முல்லை வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என்றும் தேவையான ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்து அவரை மீண்டும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த போராட்டத்தில் காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை பாடசாலைக்குள் எவரையும் செல்லவிடாது தடுத்து எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
தீர்வு
இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார்.
இதன்போது அடுத்த வாரத்தில் குறித்த
ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக உறுதியளித்துள்ளதை
தொடர்ந்து பெற்றோர்களால் பாடசாலை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.