தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் (Photos)
திருகோணமலை - பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (10.11.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொது மக்கள் சிலர் தங்களுக்கு குடியிருப்பு மற்றும் சுயதொழில் முயற்சிக்கு அரச காணியை வழங்குமாறு கோரி குறித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
அரச காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து பல காணிக்கச்சேரிகளுக்குச் சென்றும் நீண்டகாலமாக அரச காணிக்காக தாம் காத்திருப்பதாகவும், இதுவரை தமக்கு காணி வழங்கப்படவில்லை எனவும், தமக்கு காணியை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சிக்காக 160 காணித்துண்டுகள் இப்பகுதியில் 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள போதும் அவற்றில் 15இற்கும் குறைவான காணிகள் மாத்திரமே தொழில் முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய காணித்துண்டுகள் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும், அவற்றை சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற அரச காணி இல்லாத சரியான நபர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.







