நிதி மோசடி வழக்கு: சீன கோடீஸ்வரருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரும் கோடீஸ்வரருமான குவோ வெங்குய், பில்லியன் டொலர் அளவிலான பிரமாண்ட நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'மைல்ஸ் குவோ' என்றும் அழைக்கப்படும் இவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விமர்சகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றி பல நூறு மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக நீதிபதி அனலிசா டோரஸ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நிதி மோசடி வழக்கு
மேலும், அவர் மோசடி செய்த தொகையிலிருந்து சுமார் 889 மில்லியன் டொலர்களை அபராதமாகத் திரும்பச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இருந்த குவோ, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து தப்பி ஓடி அமெரிக்காவில் குடியேறினார்.

அங்கு சீனாவில் ஜனநாயகத்தைக் கொண்டு வர விரும்புபவர்களைக் குறிவைத்து, கிரிப்டோகரன்சி மற்றும் பல்வேறு போலி முதலீட்டுத் திட்டங்களின் மூலம் 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பணத்தைச் சேகரித்துள்ளார்.
அவ்வாறு திரட்டப்பட்ட முதலீட்டுப் பணத்தைக் கொண்டு, நியூஜெர்சியில் உள்ள பிரமாண்ட சொகுசு பங்களா, சொகுசுப் படகுகள், லம்போர்கினி மற்றும் பெராரி போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இந்த வழக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு குவோ மீதான பணமோசடி மற்றும் பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டுகள் ஒருமனதாக நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை வாசித்த நீதிபதி டோரஸ், "சீனாவில் ஜனநாயகத்தை மலரச் செய்ய நினைத்த அப்பாவிகளின் நம்பிக்கையை குவோ தனது பேராசைக்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்" என்று சாடினார்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தனர்.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குவோ, சீன கம்யூனிஸ்ட் அரசு தனக்கு எதிராகத் தொடுத்துள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan