சுமந்திரன் மற்றும் சிவகரனின் செயற்பாட்டினை பாதிக்கப்பட்ட மக்கள் நம்ப தயாரில்லை: கருணாவதி
உறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும், பெயருக்கும் புகழுக்கும் போட்டி போடும் நயவஞ்சகர்களுக்கு எங்கே புரியப் போகிறது என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பி.கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அனைத்துலக ரீதியில் இலங்கையின் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தற்போது பேசுபொருளாக பார்க்கப்படுவதாலும், ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாலும் இதற்கான பின்னணிப் பணிகளை இந்தியா, இலங்கை உளவுத்துறை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
நீதி கோரல் விடயத்திற்கு சுமந்திரனை மீண்டும் கையாண்டு ராஜபக்ஷ அரசினை காப்பாற்றும் முயற்சியில் சிவகரன் தலைமையிலான அணி ஒன்று களம் இறங்கியுள்ளார்கள்.
அந்த பட்டியலில் பிரதானமாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் அடங்குகின்றனர். நீதி கோரல் தொடர்பில் சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களாலும் சில அரசியல் தலைவர்களாலும் நிராகரிக்கப்பட்டு அவரின் தலையீடு நிறுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மறு வடிவத்தில் உளவுத்துறையின் நிகழ்ச்சியில் சிவகரன் ஊடாக சுமந்திரனை மீண்டும் கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்பி சிங்கள அரசினை காப்பாற்ற முயன்றுள்ளார்.
சிவகரனின் இவ்வாறான நடவடிக்கையினை பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் கண்டிப்பதுடன் அதனை நிராகரிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவராக முன்னர் செயற்பட்ட சிவகரன் இப்போது உளவுத்துறையின் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் என தனக்கு தானே பதவியினை வைத்துக் கொண்டு நீதிகோரல் தொடர்பான ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தார்.
அனைத்துலக கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரல் விடயத்தில் தவறு இழைத்துள்ளமையால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கில் உறவுகளை காணாமல் இறந்துள்ளனர்.
அந்த இறப்புக்கு பின்னால் இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களை அழைத்து சங்கம் ஆவணம் வெளியிட்டனர். தேர்தலில் தோல்வியடைந்த கூட்டமைப்பை தட்டி நிமிர்த்த வேண்டிய பொறுப்பு மேற்குலக நாடுகளுக்கு உண்டு.
இந்தநிலையில் தென்னிலங்கை இனவாதிகள் கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கூட்டமைப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.
கூட்டமைப்பை தடை செய்யும் அளவிற்கு கூட்டமைப்பு என்ன சாதனை செய்தது என்பது யாவரும் அறிந்ததே.
இது இந்திய இலங்கை உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலாகும். இவ்வாறான நிகழ்ச்சி நிரலுக்கு பலம் வழங்கும் வகையில் சிவகரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய உளவுத்துறைக்கு வேலை செய்யும் சில நபர்களே சிவகரனை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு சுமந்திரனை ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் களம் இறக்கி இலங்கை அரசினை காப்பாற்ற வேண்டும் என்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுமந்திரனின் உட்பட சிவகரனின் செயற்பாட்டினை பாதிக்கப்பட்ட மக்கள் நம்ப தயாரில்லை. தமிழரின் உண்மையான அரசியலுக்காக தங்களை அர்ப்பணிக்க அரசியல்வாதிகளும் தயாரில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள்தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் தமிழர்களை உசுப்பேற்றும் பேச்சுக்களை பேசி ஏமாற்றி ஐ.நா. சட்டதிட்டங்களை மதிக்காமல் பொய் தகவல்களை கொடுத்து, ஆட்கடத்தல்களில் பணம் வசூலிப்பு போன்ற குற்ற செயல்களுடன் ஈடுபட்டவர்களுடன் கூட்டுசேர்ந்து செயற்படும் சிவகரன் தொடர்பாக உறவுகளே இன்னும் ஏமாற வேண்டாம். ஐக்கிய நாடுகள் தொடர்பிலோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலோ எந்த வித அறிவும் இல்லாத சிவகரனும் அவருடன் கூட இருந்து பக்க வாத்தியம் பாடும் நபர்களும் என்னதான் அப்படி சாதித்து விட்டார்கள்?
உறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவபட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும்.
பெயருக்கும் புகழுக்கும் போட்டி போடும் நயவஞ்சகர்களுக்கு எங்கே புரியப் போகிறது உறவுகளின் இரத்தக் கண்ணீர்! ஒரு தசாப்தம் கடந்து விட்ட நிலையில் இதுவரை ஆக குறைந்தது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பதிவுகளையாவது மேற்கொண்டார்களா? அல்லது சர்வதேச விசாரணை தொடர்பில் ஒரு அங்குலமேனும் நகர்வுகளை முன் நகர்த்தி இருக்கிறார்களா? இதில் எதுவும் செய்ய திராணியற்ற இந்த குழுவில் உள்ளவர்கள் மற்ற செயற்பாட்டாளர்கள் மீது அவதூறு பரப்பி கொண்டு வைக்கோட் பட்டறை நாய் போல செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான அரசிடம் இருந்து எமக்கு நீதி கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்துள்ள நிலையில் நாம் சர்வதேச சமூகத்திடம், ஐ.நா மனித உரிமை பேரவை, ஐ.நா பாதுகாப்பு சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இருந்தே நீதியை எதிர்பார்த்து நிற்கிறோம்.
கடந்த 16.12.2019 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் என்றும், அவர்களை திருப்பி கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த ஜனாதிபதி கூற்றுக்கு ஜெனீவாவில் நின்று எமக்காக குரல் கொடுக்கிறேன் என்று மக்களை ஏமாற்றும் போஸ்கோவும் இதர தமிழ் அரசியல்வாதிகளும் மற்றும் அமைப்புகளும் என்ன பதிலடி கொடுத்தீர்கள்? எனவே எமது விடயத்தில் எம்மை கலந்தாலோசித்து எடுக்கும் முடிவுகளுக்கு மாத்திரமே நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் இதுவரை எம்மை ஏமாற்றியவர்களை இனியும் நாம் நம்ப போவதில்லை எனவும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
கடந்த நல்லாட்சி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பங்கள் கேட்டறியப்படாமல் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களது சம்மதம் இல்லாமல் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் திறக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளானது மேற்படி காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு உள்ளக விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியவர்களும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் திறக்கப்படுவதை நியாயப்படுத்தியவர்களும் எப்போதும் மறைமுகமாக தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு.
எனவே அரசு தாம் செய்த குற்றங்களுக்கு தம்மை தாமே தண்டிக்க போவதில்லை.
எனவே சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை ஒன்றின் மூலமாகவே எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.