வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம் (Video)
வடக்கு - கிழக்கு பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் அரசியல் துறைப் போராளி வேங்கை தலைமையில் நேற்று (25.11.2022) மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கணவன் மற்றும் சகோதரியை மாவீரராக கொண்ட கந்தசாமி சுமதி என்பவர் பொதுச் சுடரை ஏற்றி வைக்க முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் ஏனைய சுடர்களை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மாவீரர்களின் பொது நினைவு படத்திற்கான மலர் அஞ்சலி இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி
கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு நேற்று (25.11.2022) தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.
சபையில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைதீவு
முல்லைதீவு - தேராவில் மாவீரர் துயிலும் உள்ளத்தில் கிழக்கு மாகாண மாவீரர்களை
நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவீரர் தின
ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
முல்லைதீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கிழக்கு மாகாண போராளிகளே அதிகளவில் விதைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நினைவுகூருவதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு கிழக்கு மாகாண மாவீரர்களின் குடும்பம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துயிலுமில்லத்தில் எதிர்வரும் மாவீரர் தினத்தில் கிழக்கு மாகாண மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலிருந்து மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாளை (27.11.2022) அம்பாறையிலிருந்து பேருந்து முல்லைதீவு நோக்கி செல்லவுள்ளதுடன் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து நினைவேந்தலுக்கு வரவிரும்பும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 0754346668என்னும் தொலைபேசியுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறை
யாழ்.பருத்தித்துறை - சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (26.11.2022) நடைபெற்றுள்ளது.
சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசையுடன் சுப்பா்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு, அங்கு மாவீரா்களின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடா்கள் ஏற்ப்பட்டு உணா்வுபூா்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகம்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் கடந்த 21ஆம் திகதி உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.11.2022) யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் தூபியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி - பசுமைப்பூங்கா
கிளிநொச்சி - பசுமைப்பூங்கா வளாகத்தில் நகரத்திற்கான மாவீரரின் பெற்றோர், உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (26-11-2022) உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தமிழ் உணர்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு, அம்பாறை
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 5 இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை மாலை 6.05 மணிக்குப் பொதுச்சுடர், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெறும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், தாண்டியடி துயிலும் இல்லம், தரவை துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் என நான்கு துயிலும் இல்லங்கள் உள்ளன.
இந்த நான்கு துயிலும் இல்லங்களில் தாண்டியடி துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் உள்ளதால் தாண்டியடி சந்தியில் உள்ள பிரத்தியேக இடத்திலும், ஏனைய மூன்று துயிலும் இல்லங்களில் அதே துயிலும் இல்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.
விரும்பிய நான்கு இடங்களில் அனைவரும் அவரவர் வசதிக்கு அமைவாக கலந்துகொண்டு உயிர்நீத்த எமது உறவுகளுக்கு மனதார தீபங்களை ஏற்றி அஞ்சலி வணக்கம் செய்யலாம்.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் அம்பாறை மாவட்ட எமது மக்கள் கலந்துகொள்ளலாம். நாளை கட்டாயம் விரும்பிய அனைவரும் மாலை 4 மணிக்கு முன்னதாக குறிப்பிட்ட துயிலும் இல்லங்களுக்கு சமூகம் தருவது நல்லது" என்றார்.
யாழ்ப்பாணம்
உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது.
இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,நாளை(27) மதியத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு தாயகம் எங்கும் இருக்கக்கூடிய கடைகள் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்தி நினைவேந்தலை எழுச்சி பூர்வமாக செய்ய வேண்டும்.
நாளை 6.05 மணி அளவில் தாயகத்தில் இருக்கக்கூடிய ஆலயங்களில் மணியொலியை எழுப்புவதற்கு ஆலய நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம்.
கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைத்து மக்களும் தங்களது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
குறித்த நேரத்தில் நினைவேந்தல் நடைபெறுகின்ற துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் செல்ல முடியாத மக்கள் இல்லத்தில் இருந்தவாறு உறவுகளை நினைவேந்த வேண்டும். யாழ்ப்பாண நகரில் நல்லூர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
அதேபோன்று துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.
புங்குடுதீவு
யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்களின் பெற்றோர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தீவக ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தீவக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சி
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் விளையாட்டு மைதானம் ஒன்றில் இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், என பலரும் மாவீரர் செயற்பாட்டு குழுவினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நலன்விரும்பிகள் என சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.