நாடாளுமன்றில் அம்பலமான ஜனாதிபதியின் இரகசிய வர்த்தமானி
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்காக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் சபையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
“குறித்த வர்த்தமானி, 2025 மார்ச் மாதம் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிற்போடப்பட்ட திகதியே குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி
2025 ஜனவரி மாதம் 31ஆம் திகதியை குறிப்பிட்டு அன்றிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட அதிகபடியான வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சரிபார்ப்புச் சான்றிதழை 2013ஆம் ஆண்டு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த இரு ஜப்பான் நிறுவனங்களால் வழங்கப்படாமையால் வாகனங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடனே வாகன இறக்குமதியாளர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கதைத்தன் பின்னர் Veritas என்ற நிறுவனத்தின் சரிபார்ப்புச் சான்றிதழை அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படி ஏற்றுக் கொள்வதற்காக குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாவித்த வாகனங்கள்
அது அவ்வாறிருக்க, 1000இற்கும் மேற்பட்ட பாவித்த வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கி இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சுங்கத் திணைக்களம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் தான் உள்ளது.
இந்த இரு நிறுவனங்களையும் அழைத்து பாவித்த வாகனங்கள் பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்க முடியாது. நெருங்கிய நண்பர்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் உதவி செய்வதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. அவ்வாறெனில் ஜனாதிபதி அநுர செய்வது அதற்கு மாறாகவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



