துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்கள்
குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணி என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.