முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்த வவுனியா மக்கள்!
முல்லைத்தீவு கடலுக்கு கடந்த 5ஆம் திகதி குழிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த வவுனியாவினை சேர்ந்த மூன்று இளைஞர்களின் சடலங்களையும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் முயற்சியினால் கடலிலிருந்து சடலங்களை மீட்டு கொடுத்துள்ளமைக்கு வவுனியா மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பம் மற்றும் உறவினர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு கடற்தொழில் சம்மேளனத்திற்கு வவுனியா மக்கள் சார்பாகவும் இறந்த அந்த மூவரின் குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்பாகவும் மிகுந்த மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக இரவு பகல் பாராமல் சடலத்தினை கண்டுபிடிப்பதற்கு உதவிய கள்ளப்பாடு மீன்பிடி சமாசத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரவு வேளையில் மின்பிறப்பாக்கி மூலம் மின் ஒளிபாய்ச்சி சடலத்தினை தேடுவதற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அத்தோடு படகினை தந்துதவிய நல்லுள்ளத்திற்கும் இணைந்து சடலத்தினை தேடுவதற்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இத்தருணத்தில் மனமுவந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறியுள்ளனர்.
கடலில் மூழ்கிய இளைஞர்களைத் தேடும் பணியில் 06ஆம் திகதியன்று முல்லைத்தீவு வண்ணாங்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க கடற்தொழிலாளர்களின் 5 படகுகள் கடலில் இறங்கித் தேடுதல் மேற்கொண்டும் மற்றும் முல்லைத்தீவு கரையோர கடற்தொழிலாளர்களின் முழுமையான பங்களிப்புடனுமே உயிரிழந்த மூன்று இளைஞர்களின் சடலங்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த அரச நிர்வாகத்தினர் எவரும் இந்த இளைஞர்களின் சடலங்களைக் கடலில் தேடவில்லை, கரையோரத்தில் பொலிஸாரும் காத்திருந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பொலிஸாரின் விசாரணை அறிக்கை மற்றும் மரண விசாரணை அறிக்கைகள் என்பன துரிதமாகக் கிடைத்த காரணத்தினால் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் வவுனியாவிற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |