வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை செயற்பாடுகள் மீள ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனச் சபையின் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் உள்ள காணிப் பிணக்குகள் தொடர்பில் விரைவாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக நிறுவப்பட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் நாட்டில் ஏற்பட்ட கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதையடுத்து அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாகச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
அதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை வவுனியா, குடியிருப்பு இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறும். அதன் பின் வழமை போன்று மத்தியஸ்தர் சபை அமர்வுகள் வவுனியா நகரம், வவுனியா வடக்கு, வெண்கல செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.
எனவே, காணி பிணக்குள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வோர் மற்றும் பிணக்கு தொடர்பான கலந்துரையாடலுக்கு சமூகமளிப்போர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.