வவுனியா கோவிட் சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் அனுமதி சேவை ஆரம்பம்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் இன்று இரவு தொடக்கம் இயங்குமென இராணுவத்தினரின் வன்னி மாவட்ட கோவிட் செயலணியினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக் கட்ட வேலைகளை இன்று (12.05) பார்வையிட்ட பின்னரே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கோவிட்தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கோவிட் நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கோவிட் நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், இன்று (12.05.2021) இரவு 11.00 மணி முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நோயாளர்கள் தற்போது இராணுவ பாதுகாப்புடன் பேருந்து மூலம் வவுனியா நோக்கி வருகை தந்து கொண்டிருப்பதுடன், இரவு 11.00 மணியளவில் வவுனியா கோவிட் சிகிச்சை நிலையத்தினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.