பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படும் வட்டுவாகல் பாலம் (Photos)
முல்லைத்தீவு - பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நகருக்கான பிரதான போக்குவரத்து வீதியாகக் காணப்படுகின்ற ஏ 35 வீதியின் மிக நீளமான பாலமாகக் காணப்படும் வட்டுவாகல் பாலம் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
ஆபத்தான நிலையில் பாலம்
குறித்த பாலம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் யுத்தம் என்பவற்றால் சேதமடைந்த நிலையில், தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று வரை காணப்படுகின்றது.
இப்பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் முழுமையாகவே உடைந்துள்ளதுடன், பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டுள்ளன.
தற்காலிக புனரமைப்பு
ஏற்கனவே உடைவுகள் ஏற்பட்ட இடங்களில் தற்காலிக புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், ஏனைய இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு ஆபத்து நிலையில் காணப்படுகின்றது.
ஏற்கனவே இப்பாலத்தில் தொடர்ந்தும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு நிகழ்ந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



