அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இருந்த சிக்கல் : பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம்
கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததுடன், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதில்கூட நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஆரம்பம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில் இது குறித்து கலந்துரையாடலொன்றின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 2022ஆம் ஆண்டு நாம் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக வருமானத்தை அதிகரிப்பது எப்படி? செலவுகளைக் குறைப்பது எப்படி? வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவது எப்படி? என்ற கேள்விகளே மிகமுக்கிய சவாலாக இருந்தது.

அதனையடுத்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வரி அறவீடுகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டோம். அதேபோன்று அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி சகல அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினோம்.
நாட்டில் வரிவருமானத்தை சேகரிக்கும் பிரதான கட்டமைப்புக்களான வருமானவரித்திணைக்களம், சுங்கத்திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களம் என்பன வரி அறவீடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தன.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுக்களும் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்கின.
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான நிவாரணம்
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஆனால் அதனை முன்னிறுத்தி நாம் மிகவும் வலுவான அடித்தளத்தை இட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.

குறிப்பாக கடந்த காலங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டதைப்போன்ற 3 மடங்கு நிதி 2024 இல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம்.
எனவேதான் செலவினங்களைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை அரசுக்கு இருப்பினும், இவ்வாறான சமூகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடிக்கு காரணமான வருமான வீழ்ச்சி
2022 இலிருந்து 2023 க்கு நகர்ந்ததை விட, 2023 இல் இலிருந்து 2024 க்கு ஓரளவு சிறந்த நிலையிலேயே நகர்கின்றோம்.
இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

முன்னர் பெறுமதிசேர் வரிக்குள் உள்வாங்கப்பட்டிருக்காத பொருட்கள் இம்முறை அதில் உள்வாங்கப்பட்டிருப்பினும், இதுபற்றி நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம்.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெறுமதிசேர் வரி மூலமான வருமானத்தை 2.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்துவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். வருமான வீழ்ச்சியே இப்பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே மிகமோசமான நோய்க்கு முகங்கொடுத்திருந்த எமது நாட்டுக்கு இப்போது அவசியமான மறுசீரமைப்புக்கள் மூலம் சத்திரசிகிச்சை செய்திருக்கின்றோம். அதிலிருந்து நோயாளியால் (நாட்டினால்) உடனடியாக மீளமுடியாது. ஆனால் இதிலிருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனைச் சாதிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam