வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்திற்கு இழப்பீட்டு நிதியை வழங்க கோரிக்கை
இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரைத்துள்ளது.
வல்வெட்டித்துறை படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையின் நூல் வெளியீட்டு நிகழ்வும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் நேற்று (19) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையினை வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந. அனந்தராஜ் வெளியிட்டு வைத்திருந்தார்.
இழப்பீட்டு பரிந்துரை
இந்த இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உயிர் இழப்பிற்கான இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட முடிவினை உதாரணமாக பின்பற்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் இழப்பிற்கு 10 மில்லியன் இலங்கை ரூபாய்களை இழப்பீடாக வழங்கியதன் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 450 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் ஆகும்.
அதனடிப்படையில் வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் (29,750,574.00) ரூபா இழப்பீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த 36 பேருக்கான இழப்பீடாக 1.38 மில்லியன் (1,380,025.00) ரூபாவும், அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடாக 57.59 மில்லியன் (57,597,068.00) ரூபாய்களுமாக மொத்தமாக 88.72 மில்லியன் (88,727,667.00) ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறித்த தொகைக்கு 1989 ஆகஸ்ட் முதல் 2025 மே மாதம் வரையான காலத்திற்கான வட்டியாக 4.43 பில்லியன் (4,433,174,088.00) ரூபாய் சேர்த்து 4.5 பில்லியன் (4,521,901,754.00) ரூபாய் தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.









