வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் நியமனம்!
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவின் மறைவின் பின் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த செப்டெம்பரில் புதிய தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரால் கடந்த மாதம் சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால் பதவியிழந்தார்.
இந்த நிலையில் மீளவும் இன்று தவிசாளர் தெரிவு நடைபெற்றது, இன்றைய தெரிவில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.