மருத்துவத் தவறினால் கையை இழந்த சிறுமி வைசாலி! தாதிய உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கை அகற்றிய விவகாரம்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உசைன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான செ.லக்சயன், கு.புரந்திரன் ஆகியோர் பல்வேறு விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த தாதிய உத்தியோகத்தர், சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்று(24) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam