ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது தொடர்பில் நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்
கோவிட்-19 தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதே ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியாக இருக்கும் என்று சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய மாறுபாட்டிற்கு முகங்கொடுக்க பூஸ்டர் அளவைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால் மரபணு பகுப்பாய்வு மூலம் அதனை கண்டறிய ஆய்வக வசதிகள் இலங்கையில் உள்ளன என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த புதிய மாறுபாட்டிற்கும் எதிராக செயல்படும் என்று நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை புதிய மாறுபாட்டை பூஸ்டர் மூலம் எதிர்கொள்வதற்கே உலகின் பல நாடுகளும் தயாராகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மாளவிகே இந்த செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த புதிய மாறுபாடு அறிவிக்கப்பட்ட பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.