பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனவே, முடிந்த வரை விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஏற்கனவே பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கீழ் சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 20 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 34 சதவீதமானோருக்கு முதலாம் கோவிட் தடுப்பூசியும் 12 சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சில சர்வதேச ஸ்தாபனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.