கிளிநொச்சி மாவட்டத்தில் இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி
கிளிநொச்சி மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது பிரிவினருக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி நாளை(20)முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 - 30 வயது பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை 20ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் 21ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இது வரை 61ஆயிரத்து 508 பேர் முதற்கட்ட தடுப்பூசிகளையும் 42ஆயிரத்து 939பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
இதுவரை தடுப்பூசிகள் எதனையும் பெற்று கொள்ளாதவர்கள் நாளையும் நாளை மறுதினமும் மேற்படி தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.